Saturday, 16 August 2008

ஆகஸ்ட் 15


இந்திய தேசிய சுதந்திர தினம்.
நம்மில் அநேகருக்கு நாட்டுப்பற்று என்பது எட்டிப்பார்க்கும் நாட்களில் ஒன்று. அது வரையில் நாட்டுப்பற்று என்பது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எனப்படும் ஒரு அமைப்பின் வீரர்கள், நம் தேசத்தின் பெயரால் ஆடும் கிரிக்கெட் ஆட்டம் அளவில் தான். இன்னொரு பக்கம் பார்த்தால் காஷ்மீரில் எப்போதாவது நம் ராணுவ வீரர்கள் வீர மரணம் அடையும் போது அனுதாபம் என்கிற போர்வையில் பற்று பீறிடும். இவை எல்லாம் நிகழ கால உண்மைகள், யாரும் மறுக்க இயலாத நம் தாயக நிலைமை.

இன்று சுதந்திர நாள் என்பது அலுவலகங்களிலும் , பள்ளி, கல்லூரிகளிலும் மட்டும் கொண்டாடப்படும் ஒரு விழாவாக மாறி விட்டது. இன்று நம் நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான தனியார் நிறுவனங்களில் ஆகஸ்ட் 15 ஒரு விடுமுறை நாளாக மட்டுமே பார்க்கப்படுகிறது. நண்பர்கள் தினம் , காதலர் தினம் போன்ற வியாபார நோக்கத்தோடு நம் மேல் திணிக்கப்பட்ட தினங்களில் பரிமாறிக்கொள்ளப்படும் மின்-அஞ்சல்களும், வாழ்த்துக்களும் இந்த சுதந்திர நாளுக்கு இல்லை என்பது நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பது இல்லை.இன்னும் சொல்லப்போனால் நிறைய நிறுவனங்களில் பாகிஸ்தானின் விடுதலை நாளைத்தான் இனிப்பு பரிமாறி கொண்டாடுகிறார்கள். தவறாக நினைத்து விட வேண்டாம் ஆகஸ்ட் 15 விடுமுறை ஆதலால் நம்மவர்கள் அதற்கு முந்தைய அலுவல் நாளிலேயே இனிப்புகள் பரிமாறி கொண்டாட்டத்தை முடித்து விடுகின்றனர் !.


இப்போதெல்லாம் தீபாவளி,பொங்கல் போல் இன்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் வேறு . அதில் சுதந்திரத்திற்கு போராடிய தியாகிகளின் வரலாறோ , இன்ன பிற செய்திகளோ இருக்காது . இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்ற அடை மொழியில் திரையிடப்படும் திரைப்படங்கள், சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் நாயகன்,நாயகியின் பேட்டிகள் போன்றவைதான் இருக்கின்றன. என்ன கொடுமை பாருங்க ? ஆனால் ஒரு அயல்நாட்டு தொலைக்காட்சியான டிஸ்கவரி சானல் அன்றைய நாள் முழுதும் இந்திய பாரம்பரியம் மற்றும் கலாசாரம் சார்ந்த நிகழ்ச்சிகளை சிறப்பு நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பு செய்தனர்.(சுதந்திரம் என்றால் என்ன ? அதன் முக்கியத்துவம் என்ன ? என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்தவர்கள்) நான் ஒன்றும் டிஸ்கவரி போல் அனைத்து நிகழ்ச்சிகளையும் அப்படி தான் வேண்டும் என்று சொல்லவில்லை ஏனென்றால் டிஸ்கவரி போன்ற அலைவரிசைகளின் அடிப்படையே இது போன்ற நிகழ்ச்சிகள் தான். குறைந்தபட்சம் ஒரு நிகழ்ச்சியாவது உருப்படியாக இருக்கலாமே என்பது தான் என்னுடைய ஆதங்கம்.



தனி மனித முயற்சிதான் எந்த ஒரு சமூக அளவிலான மாற்றத்திற்கும் அடிப்படை, ஆகையால் நாம் அனைவரும்,ஒவ்வொரு தனி மனிதனும் நம்முடைய சுதந்திரத்தின் பெருமையையும்,அதற்கு கொடுக்கப்பட்ட விலையான தியாகங்களையும் உணர்வுபூர்வமாக மதித்து அந்த நாளை பெருமைப்படுத்த வேண்டும். அப்போது தான் வருங்கால தலைமுறையினர் வரையில் வரலாறு சென்றடையும். இல்லையென்றால் அப்பட்டமான சடங்காக இந்த நாள் வருங்காலத்தில் மாறி விடும் . காந்தியும்,பாரதியும்,கொடிகாத்த குமரனும் இன்ன பிற தியாகசீலர்களும் அவர்கள்தம் தியாகமும் புத்தக அளவிலேயே கரைந்து போய்விடும். அது போன்ற நிலை வராமலிருப்பது நம் கல்வி முறைகளிலும் மற்றும் நம் ஒவ்வொருவரின் கையிலும்தான் உள்ளது. தியாக வரலாற்றை போற்றி இந்தியன் என்று சொல்வதில் கர்வம் கொள்வோமாக !

வாழ்க பாரதம்...