இதோ உலக அரங்கில் ஒரு பிரமாண்டமான விளையாட்டு நிகழ்வு தொடங்கிவிட்டது ... , பதக்கம் பெறும் முயற்சியுடன். எத்தனை நாடுகள் எத்தனை மனிதர்கள் ...நாம் பெயர் கூட கேட்டிராத நாடுகள் தங்களின் பரிவாரங்களோடு புறப்பட்டு விட்டன, பதக்க வேட்டைக்கு. இனம்,தேசியம் உள்பட தங்களின் அனைத்து திறமைகளையும் வெளிக்காட்ட துடித்து கொண்டிருக்கின்றனர் ஒவ்வொரு வீரரும்.
வழக்கம் போல் நம் பாரதமும் பங்கு பெறுகிறது ... எத்தனை பதக்கம் கிடைக்கும் என்று ஒவ்வொரு நாடும் பட்டியலிடும் போது, ஒன்றாவது தேறுமா என்று இந்தியர்களாகிய நாம் ஏங்குவதை யாராலும் மறுக்க முடியாது. "Participation is more important than winning ", அதாவது வெற்றி பெறுவதைக் காட்டிலும் பங்கு பெறுவதே முக்கியமானது என்பதை நம்மவர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள் போலும் . பங்கு பெறுவதை மட்டும் தவறாமல் செய்து வருகிறோம். இன்று ஹாக்கி அணி தேர்வாகாமல் போனதை போல் ஒரு நாள், ஒருவருமே தேர்வாகாமல் பெருத்த அவமானம் ஏற்படலாம் .
அதே சமயம் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் நமது வீரர்களை மட்டும் குறை சொல்லிவிட முடியாது. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். நம் வீரர்களுக்கு சர்வதேச தரத்தில் பயிற்சி இல்லை என்பது நிதர்சனம் மேலும் ஒவ்வொரு நாடும் ஆண்டுக்கணக்கில் வீரர்களை தயார் செய்யும் போது நாம் மட்டும் "சாகும் நேரத்தில் சங்கரா சொல்கிறோம்".
இதை போல ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள்,கட்டுரைகள் ஒவ்வொரு ஒலிம்பிக்கின் போதும் புலம்பலாக,அறிவுரையாக வந்து கொண்டு தான் இருக்கின்றன. இதற்கெல்லாம் நம் அரசாங்கம் என்ன செய்கிறது...எப்படி வீரர்கள் தேர்வு நடக்கிறது , பயிற்சி ? அதற்கான செலவீனங்கள் ..... ???ஒரு பிரபலமான பாடல் வரி நினைவில் வருகிறது " என்னமோ நடக்குது ! மர்மமா இருக்குது ! "
அது சரி இப்படி எல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறோமே ? நாம் எந்த அளவிற்கு இருக்கிறோம் ஐ.பி.ல் போட்டியில் ஆடும் வரை ஆடி விட்டு(நல்லா காசு பார்த்துட்டு) அப்புறம் ரொம்ப களைப்பா இருக்குன்னு சொல்லி இலங்கை போட்டிக்கு போகாம விளம்பர படத்துல நடிக்கிற தோனி மாதிரி ஆட்களை தலை மேல் வச்சுக்கிட்டு ஆடுறோமே. நாம எல்லாம் மாற்ற போட்டிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் கொஞ்சமாவது நம்ம நாடு தேறுமில்லையா ?
ஆகையால் மகா ஜனங்களே கொஞ்சம் புலம்பலை விட்டுவிட்டு நமது ரசனை, ஆர்வம் போன்றவற்றை ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளில் செலுத்தினால் ஒரு மறைமுக உதவியாக மேற்சொன்ன அணிகளுக்கு கிரிக்கெட் ஐ போல் விளம்பரதாரர்கலாவது கிடைப்பார்கள் .
கனவு காண தடையா என்ன ? கனவு காண்போம் ...நிஜமாகும் ஒருநாள் .